சென்னை: பக்கத்து வீட்டுப் பெண்ணிற்கு நடிகை சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் நடிகை சரண்யா பொன்வண்ணன் வீடு உள்ளது. அவருக்கு அருகாமையில் ஸ்ரீதேவி என்பவர் வீடு அமைந்துள்ளது. நடிகை சரண்யாயாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி தனது கேட்டை திறந்தபோது சரண்யாவின் காரை உரசுவது போல் சென்றதால் தகராறு ஏற்பட்டுள்ளது.
20 அடி நீள கேட்டை ஸ்ரீதேவி திறக்கும்போது சரண்யாவின் வீட்டின் வெளியே அவரது கார் நிறுத்தப்பட்டிருந்தது. வாசலில் நின்ற காரை உரசுவது போல் இரும்புகேட் வேகமாக நகர்ந்ததால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியநிலையில் சரண்யா குடும்பத்தினர் ஸ்ரீதேவி வீடுபுகுந்து மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், சரண்யா குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்நிலையத்தில் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார்.
சரண்யா குடும்பத்தினர் மிரட்டிய சிசிடிவி காட்சிகளுடன் ஸ்ரீதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரண்யா பொன்வண்ணன் தரப்பிலும் ஸ்ரீதேவி மீது புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சரண்யா மீது கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.