வாஷிங்டன்: இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வௌிநாடு சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் முக்கிய தேர்வாக இருப்பது அமெரிக்கா. ஆனால் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் உயிரிழப்பது தொடர் கதையாக அரங்கேறி வருகிறது. இது அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க பைடன் நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கான வௌ்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது, “மாணவர்கள் மீதான இனம், மதம், பாலினம் உள்பட எந்த வகையான தாக்குதல்களையும் நிச்சயம் பொறுத்து கொள்ள முடியாது. இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க பைடன் நிர்வாகம் அனைத்து கடும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிபர் பைடன் தீவிரமாக உள்ளார்” என்று இவ்வாறு கூறினார்.