ஜெய்ப்பூர்: தோல்வி பயம் காரணமாகவே பிரதமர் மோடி அடிக்கடி ராஜஸ்தானுக்கு வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜ கட்சிகள் தற்போதே தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளன. இந்நிலையில் ஜெய்ப்பூர் கிராமப்புற காங்கிரஸ் தலைவராக கோபால் மீனா பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவை அழிக்க மோடி விரும்புகிறார்.
ராஜஸ்தான் வளர்ச்சிக்காக அசோக் கெலாட் அரசு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் பிரதமர் மோடி 5 முறை ராஜஸ்தானுக்கு வந்துள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தோற்றால் மக்களவை தேர்தலிலும் தோற்று விடும் என்ற அச்சம் காரணமாகவே பிரதமர் மோடி அடிக்கடி ராஜஸ்தானுக்கு வருகிறார். மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக என்ன நடக்கிறது என்பது பற்றி கவலைப்படாமல் மோடி புறக்கணித்து கொண்டே இருந்தார். ஆனால் மன் கி பாத் நிகழ்ச்சியில் மட்டும் அவர் தொடர்ந்து பேசினார்” இவ்வாறு தெரிவித்தார்.