புழல்: செங்குன்றம் அருகே வேலை செய்யாமல் டிவி பார்த்திருந்தபோது, தந்தை திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் கொக்கு மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். செங்குன்றம் நாராவாரிகுப்பம் சிகே மாணிக்கனார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது, மகள் திவ்யா(20). கடந்த 11ம்தேதி வீட்டில் இருந்த திவ்யா, வீட்டு வேலை செய்யாமல் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, தந்தை குமார் திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த திவ்யா கடந்த 12ம் தேதி, வீட்டிலிருந்த கொக்கு மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள், திவ்யாவை மீட்டு, பாடியநல்லூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, திவ்யாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திவ்யா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், திவ்யாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.