திருவள்ளூர்: வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குபதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் அறிவிப்பு வரும் வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயிற்சி விளக்க மையங்கள் அமைக்க தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை, மண்டலஅலுவலகங்கள் என மொத்தம் 11 அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பயிற்சி மையங்கள் நேற்று 18ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. இதனால் முதல்கட்டமாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான த.பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விளக்க மையத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மாலதி, தனிவட்டாட்சியர் (தேர்தல்) சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.