Thursday, May 16, 2024
Home » விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங்

விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங்

by Dhanush Kumar

சண்டிகர்: இதுவரை பேச்சுவார்த்தை தொடர்பான அழைப்பு எதுவும் தங்களுக்கு வரவில்லை என ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்காமல் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர முடியாது என மத்திய விவசாயத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா தெரிவித்திருந்தார்.

மேலும் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் நாங்கள் அதை ஏற்கவில்லை என்று கூற்றுக்கு இடம்கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். பேச்சுவார்த்தைகள் சண்டிகரில் நடைபெற வேண்டும். இதுவரை எங்களுக்கு பேச்சுவார்த்தை தொடர்பான அழைப்பு எதுவும் வரவில்லை. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து மத்திய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் நிச்சயம் செல்வோம் என்று தெரிவித்தார்.

 

You may also like

Leave a Comment

4 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi