Sunday, September 1, 2024
Home » விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

by Karthik Yash

மீண்டும் ஒருமுறை தலைநகர் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள் விவசாயிகள். மோடி அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து முதல் முறை போராட்டம் நடந்தது. இப்போது 2014 முதல் அளித்த எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை என்று புகார் கூறி இரண்டாவது முறையாக போராட்டத்திற்கு வந்து இருக்கிறார்கள் விவசாயிகள். ஆனால் அபுதாபியில் கோயில் திறக்க சென்று விட்டார் பிரதமர் மோடி. ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020 ஆகஸ்ட் 9ல் போராட்டத்தை தொடங்கினார்கள் விவசாயிகள். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.

போராட்டக்காரர்கள் மீது பஞ்சாப் எல்லையிலும், அரியானாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் பயணம் வழிமறிக்கப்பட்டது. இருப்பினும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடந்தது. பல்வேறு வழியாக பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி செல்லும் வழியை முற்றுகையிட்டனர். முதலில் வழக்கம் போல் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தார் மோடி. ஆனால் உபி தேர்தல் எல்லாவற்றையும் மாற்றியது.
கடந்த 10 ஆண்டுகளில் எந்த மசோதாவையும் திரும்ப பெறாத மோடி, முதன்முறையாக விவசாய மசோதாவை திரும்ப பெற்றார்.

மேலும் ஒன்றிய அரசுக்கும், விவசாய சங்கத்திற்கும் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் அடிப்படையில் 2021 டிச.11ம் தேதி ஒருவருடம், 4 மாதம், 2 நாட்கள் நடந்த போராட்டத்தை விவசாய சங்கங்கள் வாபஸ் பெற்றன. இப்போது 2ம் கட்ட போராட்டம். விவசாயிகளின் கோரிக்கைகள், பேச்சுவார்த்தைகள் எல்லாம் 2021 டிச.11ல் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலையை கூட வாக்குறுதி அளித்தபடி மோடி அரசு நிறைவேற்றவில்லை என்பது அவர்களின் புகார்.

ஆனால் ஒன்றிய அரசிடம் கேட்டால் நெல், கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகப்படுத்தியது நாங்கள் தான் என்பார்கள். இந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் கஜானா ஏழை, எளிய மக்களிடம் இருந்து பெற்ற வரிகளால் குவிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு சாமானியனும் பைக்கில் செல்ல பெட்ரோல் போட்டால் ஒரு லிட்டருக்கு கொடுக்கும் ரூ.102.63ல் மட்டுமே குறைந்தபட்சம் ரூ.45 வரை வரி கட்ட வேண்டிய சூழல் இன்று வரை இருக்கிறது இந்த நாட்டில். ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டி வசூலாகிறது.

எல்லாவற்றையும் கஜானாவில் குவித்து அதானி, அம்பானிகளுக்கு தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏழை விவசாயிகளை மட்டும் புறக்கணிக்கிறது. அவர்கள் கேள்வி கேட்டு ரோட்டுக்கு வந்தால், அங்கும் நடமாட முடியாதபடி தடுப்புகள், முள்வேலிகள் போடுவதுடன் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீசி மிரட்டுகிறது. இதுபற்றி எல்லாம் கேட்டால் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. 15 தவணைகளில் 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.81 லட்சம் கோடி இதுவரை வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. இது போதாதா என்பார் மோடி.

You may also like

Leave a Comment

five + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi