சென்னை : சென்னையில் வேளாண் வணிக திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் கருத்தரங்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,”வேளாண் வணிக திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வேளாண் துறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திமுக அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது.
வேளாண்மை துறை அரசின் முதன்மை துறையாக உள்ளது.
அரிசி உற்பத்தி மட்டுமின்றி சிறுதானியம் உற்பத்தியிலும் சாதனை படைத்திருக்கிறோம். 120 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 11% அதிகமாகும். ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோலாக இருப்பது வேளாண்துறைதான்.வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும் உயிரோடும் தொடர்புடையது.காவிரி டெல்டாவின் வளர்ச்சிப் பகுதிகளை அக்கறையுடன் கவனித்ததால் வேளாண் புரட்சி ஏற்பட்டுள்ளது. உழவர்களை உற்பத்தியாளர்களாக மட்டுமின்றி விற்பனையாளராகவும் மாற்ற வேண்டும்.திமுக அரசின் வேளாண் திட்டங்களால் மண்ணும் செழித்துள்ளது; மக்களும் செழித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக உழவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. விவசாயிகளுக்கு கடன் மானியம் வழங்குவதில் அக்கறையோடு செயல்படுகிறோம். தமிழ்நாட்டில் வேளாண் புரட்சி ஏற்பட்டுள்ளது; இதற்கு மகுடம் சூட்டுவது போல் வேளாண் திருவிழா நடைபெறுகிறது. விவசாயிகள் விற்பனையாளராக மாற வேண்டும் என்பதற்காக உழவர் சந்தைகளை கலைஞர் ஏற்படுத்திக் கொடுத்தார். வேளாண் ஏற்றுமதி அளவை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டு மின்னணு முறையில் பணிகள் நடைபெற்று வருகிறது.வேளாண்துறையில் உற்பத்தியை அதிகரிக்க உழவர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்.ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமானது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து நடுங்கும் குளிரில் உழவர்களை போராட வைத்தது ஒன்றிய பாஜக அரசு.வேளாண் அறிவை உழவர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் அறிந்திருக்க வேண்டும்.,”என்றார்.