பட்டுக்கோட்டை: ஒன்றிய அரசின் தாராளமய கொள்கையால் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி பட்டுக்கோட்டையில் விவசாயிகள் சாலையில் தேங்காய்களை உடைத்து நூதன போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 41,000 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர் பகுதிகளில் சுமார் 39,000 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கஜா புயலுக்கு முன் வரை தேங்காய்க்கு நல்லவிலை கிடைத்து வந்தது.
அதன்பின் ஒன்றிய அரசு கொண்டு வந்த தாராளமய கொள்கையால் தேங்காய் உற்பத்தி பொருட்கள் இறக்குமதி அதிகரித்தது. இதனால் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு தேங்காய் உற்பத்தி செய்ய ரூ. 15 முதல் ரூ. 20 வரை செலவாகும் நிலையில் தற்போது தேங்காய்க்கு ரூ. 5 முதல் 6 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் ஒன்றிய அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக நேற்று பட்டுக்கோட்ைட பேருந்து நிலையத்திலிருந்து விவசாயிகள் தேங்காய்களை கைகளில் ஏந்தியவாறு 3 கி.மீ ஊர்வலமாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றனர். பின்னர் தேங்காய்களை சாலையில் உடைத்து போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும் , ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.