ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் முதல் ஆந்திரா மாநிலம் சித்தூர் வரை 128 கி.மீ தூரத்திற்கு ரூ.3200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைத்து, தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது.
இந்த, 6 வழிச்சாலை பணிக்காக ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 18 கிராமங்கள், பள்ளிப்பட்டு வட்டத்தில் 6 கிராமங்கள், பொன்னேரி வட்டத்தில் 6 கிராமங்கள் என மொத்தம் 30 கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே புதுச்சேரி கிராமத்தில் விவசாய பகுதியில், 6 வழிச்சாலைக்காக சாலை பணிகள் நேற்று தொடங்கியது.
இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள், நிலத்தை எடுப்பதற்காக அரசு 3 தவனையாக நஷ்டஈடு வழங்குவதாக கூறியது. ஆனால், ஒரு தவனை மட்டுமே பணம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 2 தவனை நஷ்டஈடு தரவில்லை எனவும், தற்போது பயிர் வைத்துள்ளோம். பயிர்களை அறுவடை செய்த பிறகு, சாலைப் பணிகளை தொடங்குகள் எனக்கூறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த, ஆறுவழிச்சாலை பணி தாசில்தார்கள் காந்திமதி, லியோ, ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன், இன்பெக்டர் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விவசாயிகள் சாலை பணிக்கு சம்மதிக்காததால், இது தொடர்பாக உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனக்கூறினர். அதன்பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.