Tuesday, May 21, 2024
Home » தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்: ஒன்றிய அரசு உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்: ஒன்றிய அரசு உத்தரவு

by Ranjith

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது. இந்தியா முழுவதும் 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை, 8 வழிச்சாலை என புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது.

இப்படி போடப்பட்ட ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 49 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ல் போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

அதன்படி அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் திண்டிவனம்-ஆத்தூர், போகலூர், புதுக்கோட்டை மாவட்டம் பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலூர், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்தூர், நெல்லூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புத்தூர்,

பள்ளிக்கொண்டா, பரனூர், பட்டரை பெரும்புதூர், புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.110, மாதாந்திர கட்டணம் ரூ.2,395 இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.115, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.175, பேருந்து, சரக்கு வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ.245, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ.265, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.400 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.570 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள் 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.465, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணம் ஆகும். உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே காலாவதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதனை மூட லாரி உரிமையாளர் சங்கம், வாகன உரிமையாளர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* 32மூடப்பட வேண்டிய சுங்கச்சாவடிகள்
15 ஆண்டுகளைக் கடந்த காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்பது ஒன்றிய அரசின் விதியாகும். இதன்படி பார்த்தால் தமிழகத்தில் மொத்தம் உள்ள 49 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை கண்டிப்பாக மூட வேண்டும். ஆனால் புதிய சுங்கச்சாவடிகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டு வருகிறது. அண்மையில் நத்தம்-மதுரை சுங்கச்சாவடி திறக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணம், தமிழ்நாட்டில் எந்த சுங்கச்சாவடியிலும் இல்லாத அளவுக்கு அதிகம். இதனால் வாகன ஓட்டிகள் கடும் வேதனையில் உள்ளனர்.

* ஒரு முறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாதாந்திர கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

* பரனூர் சுங்கச்சாவடியில் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.45 முதல் ரூ.200 வரை உயர்த்தப்பட்டது.

* உள்ளூர் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை அதிகரிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi