சென்னை: டி.டி.எஃப் வாசன் யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உதவியுடன் யூடியூப் சேனலை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி காஞ்சிபுரம் அருகே சென்னை – தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது ஸ்டண்ட் செய்ய முற்பட்டு விபத்தில் சிக்கினார். தொடர்ந்து செப்டம்பர் 19ம் தேதி பாலுச்செட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, இரு சக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு 45 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது. அதன்படி தினமும் காவல்நிலையத்தில் யூடியூபர் டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது டி.டி.எஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. முன்னதாகவே டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகள் வரை போக்குவரத்து ஆணையம் முடக்கி வைத்துள்ளது. தற்போது அவரின் யூடியூப் சேனலை முடக்கும் பணியை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நீதிபதி இலக்கியா முன்பு ஆவணத்தை பதிவு செய்துள்ளனர். டி.டி.எஃப் வாசனின் யூடியூப் சேனல் இளைஞர்களையும், சிறார்களையும் தவறான பாதையில் வழிநடத்தி வருகிறது. எனவே இந்த யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் நோட்டீசை பெற்றுக் கொண்டு அதன்பேரில் யூடியூப் நிறுவனத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த செய்தி தற்போது டி.டி.எஃப் வாசனின் ரசிகர்களுக்கு பேரிடியான அமைந்துள்ளது.