திருவொற்றியூர்: புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு சுப்பிரமணி சிவா தெரு பகுதியில் சிலர் போதை பவுடர் பதுக்கி விற்பனை செய்வதாக வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யாபாரதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வடக்கு இணை ஆணையர் தனிப்படை போலீசார் நேற்று காலை சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது போலீசாரைப் பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடினர். துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் அவர்களை துரத்திப் பிடித்தனர். இதில் கீழே விழுந்த 2 பேருக்கும் இடது கால் எலும்பு முறிந்தது. 2 பேரையும் கைது செய்து புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், ஒருவர் பிரபல ரவுடியான புதுவண்ணாரப்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஈஷா (எ) ஈஸ்வரன் (33) என்பது தெரிய வந்தது. இவர்மீது இசிஆர் பகுதியில் வழக்கறிஞர் காமேஷ் என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றது உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்கு, தொழில் அதிபர்களிடம் மிரட்டல் விடுத்து பணம் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.
மற்றொருவர் புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ கோயில் தெருவைச் சேர்ந்த யுவராஜ் (எ) எலி யுவராஜ் (38) என்பதும், இவர் மீதும் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது. வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடிகளான இவர்கள் பிரபல ரவுடி கல்வெட்டு ரவியின் கூட்டாளிகளாக இருந்தனர். பின்னர் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அவரிடமிருந்து பிரிந்து வந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தாதாவான சம்பவம் செந்திலின் கூட்டாளிகளாக இருவரும் இருந்தனர்.
தற்போது கொலை, வழிப்பறி, போதை பவுடர் விற்பது என பல்வேறு குற்ற சம்பவங்களில் இருவரும் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கால் உடைந்ததால் இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீஸ் காவலில் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரிடமிருந்தும் 1,400 கிராம் மெத்தகுளோரின் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை ஆய்வாளர் கிருஷ்ணராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் வடசென்னை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.