Sunday, September 1, 2024
Home » அதிகரித்த குடும்ப செலவு

அதிகரித்த குடும்ப செலவு

by MuthuKumar

பிரதமர் மோடி தலைமை ஏற்ற பிறகு நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாதாந்திர குடும்ப செலவு இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களில் கூட மாதாந்திர செலவு இரண்டு மடங்கு அதிகரித்து ஏழை, எளிய மக்களின் வாழ்வில் பெரும் பொருட்சுமையை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கடந்த 10 ஆண்டுகளில் சுமத்தி வைத்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் குடும்ப நுகர்வோர் செலவீன ஆய்வு அறிக்கையில் இந்த செலவு அதிகரிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2014ல் பதவி ஏற்ற போது கச்சா எண்ணெய் விலை சரிந்து விட்டது. ஆனால் எடுத்த எடுப்பிலேயே பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தி விட்டார் பிரதமர் மோடி. பல லட்சம் கோடிகள் அதனால் வருவாய். அதோடு விடவில்லை. அன்றாடம் உபயோகப்படுத்தும் காஸ் சிலிண்டர் விலை ₹1150ஐ எட்டியது. அதுமட்டுமா? சமையலுக்கு அன்றாடம் உபயோகப்படுத்தும், அத்தியாவசிய பொருட்களும் தாறுமாறாக இந்த 10 ஆண்டுகளில் உயர்ந்து நிற்கின்றன. அரிசி விலை உச்சத்தில் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட 25 கிலோ உயர்தர பொன்னி அரிசி ₹700 முதல் 800க்குள் வாங்கி விடலாம். இன்று அப்படியே இரண்டு மடங்கு விலை உயர்ந்து விட்டது. சமையல் எண்ணெய், பருப்பு, காய்கறிகள் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. அரிசி, கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தும் இன்று வரை விலை குறைந்தபாடில்லை.

ஏழை, எளிய மக்களின் ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும் 60 பைசா அளவுக்கு வரி என்ற வகையிலும், ஜிஎஸ்டி என்ற வகையிலும் அடித்து பிடுங்கிக்கொள்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. திக்கற்று திகைத்துப்போய் நிற்கிறார்கள் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்கள். கொரோனா தொற்று பரவிய 2020 மார்ச் மாதம் முதல் இப்போது வரை 80 கோடி பேருக்கு ரேஷனில் 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை ஒன்றிய அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரவில்லை. மாதாந்திர செலவுகள் குறையவில்லை. நெல், கோதுமை விளைச்சல் அமோகமாக இருந்தும் எதையும் கட்டுக்குள் கொண்டுவர மோடி அரசால் முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி 1 கிலோ அரிசி ₹29 என்ற விலையில் பாரத் அரிசி திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்தனை இருந்தும் எதையும் குறைக்க முடியவில்லை. காரணம் மக்கள் மீது மோடி அரசு சுமத்திய வரித்தீவிரவாதம். அத்தனை வரியும் மோடி அரசிடம் குவிக்கப்பட்டு, மக்கள் மீது சுமை மட்டும் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

இந்த 10 ஆண்டுகளில் செலவு அதிகரித்தாலும் தனிநபர் வருமானம் கிராமப்புறங்களில் 1.4 சதவீதமும், நகர்புறங்களில் 1.3 சதவீதமும் மட்டுமே உயர்ந்து இருக்கிறது. அதாவது வருவாய் இல்லை, செலவு மட்டும் அதிகரித்து இருக்கிறது. ஆனால் பா.ஜவிடம் கேட்டுப்பாருங்கள், மக்களிடம் பணம் அதிகரித்து வாங்கும் சக்தி உயர்ந்து இருக்கிறது என்பார்கள், அப்படித்தானே?.

You may also like

Leave a Comment

11 + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi