சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018ல், சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. இதுபற்றி விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் நான்கு மாதத்திற்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது. ஆனால் போலீசார் விசாரணை முடிக்கவில்லை என்று ஒளிப்பதிவாளர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, டிசம்பர் 12ம் தேதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறி, சிசிடிவி காட்சிகளை போலீசார் தாக்கல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளவரசு தரப்பில், டிசம்பர் 13ம் தேதி தான் இளவரசு ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகவும், டிசம்பர் 12ம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும், காவல்துறையினரின் சிசிடிவி காட்சிகள் போலியானவை என்றும் வாதிடப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார் என்பதற்கான மொபைல் அழைப்பு விவரங்களை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, போலீஸ் தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, மொபைல் லொகேஷன் விவரங்கள், சிடிஆர் விவரங்களை தாக்கல் செய்தார். காவல் துறை சமர்ப்பித்த விவரங்களை ஆய்வு செய்த நீதிபதி, காவல் நிலையத்தில் இளவரசு ஆஜரானதற்கான ஆதாரங்கள் உள்ளது. நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம். மன்னிப்பு கோராவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து போலீசாரின் விளக்கத்திற்கு பதில் தர உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.