புதுடெல்லி; பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் இளைஞர்கள் இரவில் போதையில் சாலையில் விழுந்து கிடக்கிறார்கள் என்று ராகுல்காந்தி பேசியதற்கு பா.ஜ கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதியாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது அவரது யாத்திரை உபி மாநிலத்தில் உள்ளது. அமேதி தொகுதியில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி,’ பிரதமர் மோடி வெற்றி பெற்ற வாரணாசியில் மக்கள் மது அருந்தி சாலையில் விழுந்து கிடக்கிறார்கள். இரவில் குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடப்பதால் உபியின் எதிர்காலம் நடனமாடுகிறது’ என்றார். அவரது பேச்சுக்கு பா.ஜ கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கூறுகையில்,’ உத்தரப்பிரதேச இளைஞர்கள் குடிபோதையில் இருக்கிறார்கள் என்று ராகுல் கூறுகிறார். ராகுல் காந்தி உங்கள் பேச்சால் நான் வெட்கப்படுகிறேன். நாடு உங்களைக் கண்டு வெட்கப்படுகிறது. தயவுசெய்து உங்கள் மொழியை மேம்படுத்துங்கள்.மேலும் ராம பக்தர்களை அவமதிப்பதை நிறுத்துங்கள்’ என்றார்.