மதுரை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே குள்ளிசெட்டிபட்டியை சேர்ந்தவர் ராமுத்தாய் (72). இவரது மூத்த மகன் நடராஜன் கப்பல் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மதுரை ஆத்திக்குளம், குறிஞ்சி நகரில் உள்ளது. இந்த வீட்டில் ராமுத்தாய் தங்கியுள்ளார். கடந்தாண்டு ராமுத்தாயின் சகோதரியின் மகன் பாலமுருகனின் வங்கி கணக்குக்கு நடராஜன் ரூ.15.62 கோடி அனுப்பியுள்ளார்.
அதை வைத்து மதுரை, சென்னை ஆகிய இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டு பாலமுருகன் காப்பாளராக செயல்பட்டு வந்துள்ளார். துப்பாக்கி முனையில் ராமுத்தாயை மிரட்டி, சொத்து ஆவணங்கள் மற்றும் 1000 பவுன் தங்க நகைகளை பறித்து தப்பியுள்ளார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலமுருகன், ஓபிஎஸ் அணியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.