Tuesday, May 21, 2024
Home » பொன்னேரி அருகே தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்: புறநகர் ரயில்கள் தாமதம்

பொன்னேரி அருகே தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்: புறநகர் ரயில்கள் தாமதம்

by Mahaprabhu

பொன்னேரி: பொன்னேரி அருகே ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கம் வழியாக இன்று அதிகாலை சென்னை வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதனால் அவ்வழியே சென்னை செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இருந்து கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கம் வழியாக இன்று அதிகாலை சென்னை நோக்கி சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் பொன்னேரி-மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது, திடீரென இன்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியிலேயே தண்டவாளத்தில் அப்படியே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அதிகாலை முதல் கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் சென்னைக்கு வரவேண்டிய அனைத்து புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

அனைத்து ரயில்களும் ஒன்றன் பின் ஒன்றாக அந்தந்த பகுதிகளில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து, சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த ரயிலின் வேகத்தை குறைத்து, மீஞ்சூர் ரயில் நிலையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு வந்து நிறுத்தினர். தற்போது அந்த ரயிலில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் சென்னை செல்ல வேண்டிய புறநகர் மின்சார ரயில்கள் உள்பட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் துவங்கப்பட்ட 4 வழிப்பாதை இருப்புப்பாதை பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இதனால் அம்மார்க்கத்தில் 2 வழிப்பாதைகளில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், சிக்னல் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரயில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, இன்று காலை புறநகர் மின்சார ரயில்கள் மூலம் சென்னையில் வேலைக்கு செல்பவர்கள், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் ரயில்வே ஊழியர்களால் சரிசெய்யப்பட்டு, சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு மேல் கும்மிடிப்பூண்டி-சென்னை ரயில் மார்க்கத்தில் வழக்கம் போல் புறநகர் மின்சார ரயில்கள் இயங்கத் துவங்கியதாக ரயில் பயணிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

eighteen + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi