சென்னை: தனது தியேட்டர் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ தொகையை தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் செலுத்தாத வழக்கில் நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு, எழும்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தார். அங்கு பல தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் அந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் தியேட்டர் நிர்வாகம் செலுத்தவில்லை.
இது தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது. இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயப்பிரதா தரப்பு வழக்கறிஞர், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்திவிடுவதாக தெரிவித்தார். இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.