ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மலையப்ப பாளையத்தில் கல்குவாரிக்கு உரிமம் வழங்க கோரி 75 குடும்பத்தினர் நம்பியூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் கொத்தடிமைகளாக இருந்த 60 பேரை கடந்த 1999-ம் ஆண்டு மாநில அரசு மீட்டு தமிழ்நாடு அழைத்து வந்தது. அவர்கள் வாழ்வாதாரத்திற்காக மலையப்ப பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகளை கையால் உடைக்கவும் அனுமதி வழங்கிய இருந்தது.
இவர்கள் பின்னர் கோபி வட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு ஜல்லி மற்றும் கல் உடைப்போர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு 5 ஆண்டுக்கு ஒருமுறை குவாரி உரிமம் புதுப்பித்து வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அவர்கள் குவாரி உரிமத்தை புதுப்பிக்க முயன்றபோது அங்கு சட்ட விரோதமாக குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதை காரணம் காட்டி கனிமவளத்துறையினர் உரிமை நீட்டிப்புக்கு மறுத்து விட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நம்பியூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.