ஈரோடு: பள்ளியில் நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில்களை வழங்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சுமார் 500 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
ஜூன் மாதம் முழுவதையும் சுற்றுசூழல் பாதுகாப்பு மாதமாக இந்த பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கடைபிடித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பாட்டில்களில் மாணவர்கள் தண்ணீர் கொண்டுவருவதை தவிர்க்க அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தாட்சாயணி தனது சொந்த செலவில் ரூ.1 லட்சம் மதிப்பில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில்களை வழங்கியுள்ளார்.
நெகிழி பயன்பாடுகளில் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்பு குறித்தும். முதலமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்தும் மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்திவருகிறார். சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு தொடக்க முயற்சியாக இதை செய்திருப்பதாக தெரிவித்த தலைமை ஆசிரியர் தாட்சாயணி மற்ற பள்ளிகளிலும் இதை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது இந்த முயற்சிக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.