சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வான பின்பு, முதன் முறையாக இன்று காலை ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டசபைக்கு வந்தார். அவரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உற்சாகமாக வரவேற்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி ஏற்றார். அதை தொடர்ந்து டெல்லியில் மூத்த தலைவர்களை சந்திக்க சென்று விட்டு சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நுரையீரல் பிரச்சனை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அவரது உடல் நலம் குறித்து பரபரப்பு தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில், அனைத்து நோய்களில் இருந்தும் குணமடைந்து கடந்த வாரம் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு திரும்பினார். தனது வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அவரை மருத்துவர்கள் சில நாட்கள் நன்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை 9 மணி அளவில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டசபையில் கலந்து கொள்வதற்காக தலைமை செயலகத்துக்கு வந்தார். அவரை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் எம்எம்எல்ஏக்கள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
பேரவை வளாகத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சிறிது நேரம் உரையாடினார். இதையடுத்து பேரவை லாபியில் வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஈவிகேஎஸ்.இளங்கோவன் 34 ஆண்டுகளுக்கு பிறகு சட்ட சபைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.