ஈரோடு: போதிய ஆசிரியர்களை நியமிக்க கோரி ஈரோட்டில் அரசு பழங்குடியினர் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பர்கூர் மேல்நிலை பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 311 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 11 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் மொழி பாடங்கள் மற்றும் கணிதம், உயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்கு 7 ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் போதிய ஆசிரியர்களை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுடன் ஒரு நாள் அடையாள உண்ணா விரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் பர்கூர் பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் திடீர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
சிறிது நேர ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். அரசு பர்கூர் மேல்நிலை பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் பழங்குடியின மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை உடன் இணைப்பதாக அரசு அறிவித்திருந்த போதிலும் அதற்கான நடைமுறைகள் இன்னும் பின்பற்றப்படவில்லை என்றும் மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.