சென்னை: குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய திட்டப்பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புதாரர்களுக்கு ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.25,000 வீதம் 10 குடும்பங்களுக்கு ரூ.2,50,000 மதிப்பீட்டில் தள்ளு வண்டிகளை வழங்கினார்.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், நீர்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி , சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டம் 2017 ஆம் முதல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் வாரிய திட்டப்பகுதிகளான பெரும்பாக்கம், நாவலூர், கூடப்பாக்கம் , அகில இந்திய வானொலி திட்டப்பகுதி, கேசவ பிள்ளை பூங்கா, அத்திப்பட்டு ஆகிய திட்டப்பகுதிகளில் இதுவரை 13,382 குடும்பங்களுக்கு மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இத்திட்டப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புதார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறு தொழில் உதவி திட்டத்தின் கீழ் சுய தொழில் செய்யும் குடும்பங்களுக்கு தள்ளுவண்டிகள், மூன்று சக்கர வண்டிகள், நகல் எடுக்கும் கருவிகள், மாவு அரைக்கும் இயந்திரங்கள், சிற்றுண்டி கடைகள் நடத்துவதற்கான பாத்திரங்கள், தையல் இயந்திரங்கள் , மின் இணைப்பு தையல் இயந்திரங்கள் போன்ற இதர உபகரணங்கள் இதுவரை 1550 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் தலா ரூ.25,000 வீதம் 10 குடும்பங்களுக்கு ரூ.2,50,000 மதிப்பீட்டில் இன்று தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு.பிரபாகர் இ.ஆ.ப., இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப., வாரிய செயலாளர் துர்காமூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் வே.சண்முகசுந்தரம், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் ஜே.நிர்மல்ராஜ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.