Monday, May 13, 2024
Home » செங்கை, காஞ்சி மாவட்டங்களில் சுற்றுலா விருது பெற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டம்

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் சுற்றுலா விருது பெற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டம்

by Ranjith

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா விருது பெற தொழில் முனைவோர் விண்ணப்பித்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோருக்கு உரிய தமிழ்நாடு சுற்றுலா துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு, மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய அறிவிப்பாகும். தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு, தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது. இந்த விருதுகள் சுற்றுலா தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளை செயல்படுத்தும் சுற்றுலா தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கப்படும்.

இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆப்ரேட்டர்கள், விமான நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இந்த விருதை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்எம் ஓட்டல் கூட்டரங்கில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில், காஞ்சிபுரத்தில் உள்ள விடுதி உரிமையாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள், சுற்றுலா அமைப்பாளர்கள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலா பகுதியாக மாற்ற எவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், காஞ்சிபுரத்தில் சுற்றுலா பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு இணையதளத்தை உருவாக்கி அதன்மூலம் சுற்றுலா பகுதியாக மாற்றும் திட்டத்திற்கு அனைவரும் ஒருசேர ஒத்துழைப்பு தருவது என்பது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் உதவி சுற்றுலா அலுவலர் சரண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* மாமல்லபுரம்
சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்க செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நடப்பாண்டில் சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்க செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாமல்லபுரம் கோவளத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். துணை சுற்றுலா அலுவலர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இதில், சுற்றுலா ஆபரேட்டர்கள், சாகச சுற்றுலா நடத்துபவர்கள், சுற்றுலா ஏற்பட்டாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், ஓட்டல் மற்றும் ரிசார்ட் மேலாளர்கள் என 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, சுற்றுலா அலுவலர் சக்திவேல் பேசுகையில், ‘உலக சுற்றுலா தினத்தன்று ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா துறை மூலம் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் சுற்றுலா தொழிலை செயல்படுத்தும் சுற்றுலா தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும். கடந்தாண்டு, வாங்கிய விருதுகளை விட இந்தாண்டு செங்கல்பட்டு மாவட்டம் அதிகளவில் விருதுகள் வாங்க வேண்டும். மேலும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தினார்.

You may also like

Leave a Comment

16 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi