புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் 8வது முறையாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குபதிந்தது. கடந்த ஓர் ஆண்டாக ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள் சிலர் சிறையில் உள்ளனர். இவ்வழக்கில் ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. இதுவரை 7 சம்மன்கள் அனுப்பப்பட்டும், அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை.
மேலும் சம்மன் சட்ட விரோதமானது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வோடு அனுப்பப்படும் சம்மன்கள் என்று கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இதுகுறித்து அண்மையில் டெல்லி முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், ‘இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை மார்ச் 16ம் தேதி வரவுள்ளதால், தினமும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும்.’இவ்வாறு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக மார்ச் 4-ம் தேதி ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. மார்ச் 4-ம் தேதி கெஜ்ரிவால் ஆஜராவாரா? அப்படி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானால் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் போல கைது செய்யப்படுவாரா? என்கிற பரபரப்பு நிலவுகிறது.