மும்பை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிரா மாஜி முதல் அமைச்சர் அசோக் சவான் துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், மாநில பாரதிய ஜனதா தலைவர் சந்திரசேகர் பவான்குலே முன்னிலையில் பாரதிய ஜனதாவில் நேற்று சேர்ந்தார். இது தொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில்,’ அசோக் சவான் போர்க்களத்தை விட்டு விலகி விட்டார். அவரை தொடர்ந்து சில கட்சி எம்எல்ஏக்களும் பா.ஜவுக்கு செல்லலாம் என்கிறார். ஆனால் எந்த ஒரு எம்எல்ஏவும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள். ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் எதிர்வினை உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் சில பா.ஜ எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர்.
மஹா விகாஸ் அகாடியை பலவீனப்படுத்த பாஜ முயற்சிக்கிறது. ஆனால் இதுபோன்ற செயல்கள் கூட்டணி உறுதியை வலுப்படுத்தும். அசோக் சவான் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், கட்சியின் முகமாகவும் இருந்தார். அவர் போராடியிருக்க வேண்டும். அதற்கு பதில் அவர் போர்க்களத்தை விட்டு வெளியேறி விட்டார். அவர் ஏன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்? அவரிடம் பதில் இல்லை. அவரது நடத்தையை மக்கள் ஏற்க மாட்டார்கள். அமலாக்க இயக்குநரகம், சிபிஐ மூலம் அவருக்கு அழுத்தம் இருந்ததா? அவருக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டது என்பது தெரியவில்லை’ என்றார்.
* 400 என்றார்கள்… இப்போ சவானை இழுக்கிறார்கள்
பா.ஜவை சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே சரமாரியாக விளாசி உள்ளார். அவர் கூறும்போது,’ பாஜவில் சேருவதற்குப் பதிலாக, அசோக் சவான் பருவமழை, ஆலங்கட்டி மழை பாதிப்பில் தத்தளிக்கும் மராத்வாடா பகுதி விவசாயிகளைச் சந்தித்திருக்க வேண்டும். 2 நாட்களுக்கு முன்பு வரை கூட்டணி சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் அசோக் சவான் இடம் பெற்று இருந்தார். ஆனால் இப்போது அவர் பாஜவில் இணைந்து விட்டார். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவார் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது அவர் அணி மாறி, நாங்கள் யாரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த கட்சியில் சேர்ந்திருப்பதை நான் காண்கிறேன். இன்று பாஜ, சவான் இருவரும் பயப்படுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று அறிவித்த பிறகும் பாஜவுக்கு பயமாக இருக்கிறது.