மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில், 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா சிகிச்சைக்காக ஜம்போ மருத்துவமனைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டன. இதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. அஷிஷ் ஷெலார் புகார் செய்தார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரின் அடிப்படையில், அமலாக்கத் துறை சட்டவிரோத பணபரிமாற்ற மோசடி செய்ததாக தனியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா மையங்களை நிர்வகிக்கும் காண்டிராக்ட் எடுத்த நிறுவனத்தின் உரிமையாளர் சுஜித் பட்கர் உள்ளிட்ட 15 பேருக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சுஜித் பட்கர் முன்னாள் அமைச்சரும் உத்தவ் தாக்கரே, மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்துக்கு மிகவும் நெருக்கமானவர். ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால் உட்பட பல அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.