சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது, ஒன்றிய அரசின் அப்பட்டமான அடக்குமுறை என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முழுவதும் சோதனை நடத்தினர். சோதனை நிறைவடைந்தவுடன் இன்று அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது நடவடிக்கை பற்றி கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை. இந்த ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்று கூட சொல்ல முடியாது. இது கொடுங்கோல் ஆட்சி முறை. தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற பல வேலைகளை மத்திய அரசு செய்யும். தன்னிச்சையாக செயல்படவேண்டிய அமைப்புகள் ஒன்றிய அரசின் 5 விரல்கள் போல செயல்படுகின்றன என அமலாக்கத்துறையை விமர்சித்த சீமான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வாழ்த்துகள் என தெரிவித்தார்.