வாலாஜாபாத்: ஏனாத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 2 மளிகை கடைகளுக்கு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் நடவடிக்கை மேற்கொண்டார். வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்தூர் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பர் திட்டம்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி நேற்று துவக்கி வைத்தார். முன்னதாக, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் விழா நடைபெறும் இடத்தின் அருகாமையில் செயல்பட்டு வந்த மளிகை கடை மற்றும் உணவகங்களில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வாங்கி செல்வதை கண்ட மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார், அதிரடியாக அந்த பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழி விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு இருந்ததை கண்டறிந்து அதனை அதிரடியாக பறிமுதல் செய்து, அந்த 2 கடைகளுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, மளிகை கடைகள் மற்றும் உணவகங்கள் இருக்கும் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் நெகிழிகளை உடனடியாக தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்ற உத்தரவிட்டார். இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.