வாஷிங்டன்: பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு:
டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் நாளை இந்தியா வர இருந்த நிலையில் திடீரென பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளைய பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க் இந்தாண்டு பிற்பாதியில் இந்தியா வர உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் எலான் மஸ்க் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
குஜராத்தில் முதலீடு செய்ய எலான் மஸ்க் விரும்பவில்லை?
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்க எலான் திட்டமிட்டதாக கூறப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டெஸ்லா கார் தொழிற்சாலையை அமைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்தது. இந்நிலையில், குஜராத்தில் முதலீடு செய்ய எலான் மஸ்க் ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் எலான் மஸ்க், இந்தியா வர இருப்பதை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பயணத்தை போல் பெரிதுபடுத்த பாஜக திட்டமிட்டது.
எலான் மஸ்க் வருகை ஒத்திவைப்பு – பாஜகவினர் ஏமாற்றம்?
டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் வருகை ரத்தானதால் மோடி ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் எலான் மஸ்க் – மோடி சந்தித்துப் பேசுவது நடுத்தர வர்க்கத்தினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக கணித்திருந்தது. எலான் மஸ்க் அறிவிப்பின் மூலம் தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4ம் தேதிக்கு முன் அவர் இந்தியா வரமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் ஜூன் 4-ல் முக்கிய மாற்றம் நடக்கப் போவதை உணர்ந்தே எலான் மஸ்க் பயணத்தை ஒத்திவைத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.