சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காவல்துறை, வங்கிகள், வருமான வரித்துறை, ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உள்ளிட்ட தேர்தல் பணி குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் நடைபெற்றது.
வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தேவையான இடங்களில் அமைக்கப்பட வேண்டிய தடுப்புகள் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் காவல்துறையின் சார்பில் பொறுப்பு அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், சட்டமன்றத் தொகுதி வாரியாக அரசியல் கட்சியினர் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு இணையதளம் வழியே வழங்கப்படவேண்டிய அனுமதி குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் வாக்குப்பதிவிற்காக வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட்ட வேண்டிய ஏற்பாடு பணிகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்தும், வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதேபோல் வங்கிகள், வருமான வரித்துறை மற்றும் கலால் துறை உள்ளிட்ட தேர்தல் பணி தொடர்புடைய பல்வேறு குழுக்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இப்பணிகள் சிறப்பாக மேற்கொள்வது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிக்காக முதற்கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையர் ராதாகிருஷ்ணன், தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதலாவது கணினி குலுக்கல் முறையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்குதல், நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தேர்தல் குறித்த செய்திகள், விதிமீறல்கள் ஆகியவற்றை கண்காணித்திடும் சென்னை மாவட்ட ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. அதன அடிப்படையில், தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 3,726 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு, வரும் 24ம்தேதி காலை 9 மணி முதல் 16 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பிற்கான ஆணைகள் நேரடியாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.