புதுடெல்லி: மக்களவை தேர்தல் தேதியை வெளியிட்டு தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நிருபர்களிடம் பேசுகையில்,‘‘தேர்தல் பத்திரங்களை பொறுத்தவரைக்கும் அதில் வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறது. ஜனநாயகத்தில் விஷயங்களை மறைப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்,வெளிப்படைத்தன்மையுடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம். திட்டத்தின் முதல் பகுதியான இதை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நன்கொடையாளர்களின் தனியுரிமைகள் போன்ற விஷயங்களை பாதுகாப்பதற்கு துறை சார்ந்த வழிமுறைகள் உருவாக்குவதற்கான தீர்வை காண வேண்டும். கணக்கில் வராத பணத்தை தேர்தலில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதில் தேர்தல் ஆணையம் மிக தீவிரமாக உள்ளது.
கருப்பு பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, எவ்வாறு வெள்ளையாகிறது என்பதை கண்டறிய வேண்டும். இந்த விஷயத்தில் சிறந்த வழிமுறைகள் உருவாகும் என்ற நம்புகிறேன். அனைத்து அரசியல் கட்சிகளும் நன்கொடை பெற்ற விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்பது கட்டாயமாகும். எவ்வளவு நிதி திரட்டப்பட்டுள்ளது,எவ்வாறு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை வருடாந்திர கணக்கில் குறிப்பிட வேண்டும். அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் இணைய தளத்தில் வெளியிடுகிறது’’ என்றார்.
544 தொகுதியா?.. 543 தொகுதியா?…
தேர்தல் அட்டவணையை அறிவித்தபோது, 543 தொகுதிகளுக்கு பதிலாக 544 தொகுதிகள் என்று தெரிவிக்கப்பட்டன. இதுபற்றி தேர்தல் ஆணையர் கூறும்போது,’ 544 என்று கூறுவதால் புதியதாக தொகுதி சேர்க்கப்பட்டது என்று அர்த்தம் இல்லை. மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். இதன் மூலம் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 544 ஆக கணக்கிடப்பட்டுள்ளது’ என்றார்.