சென்னை : சென்னையை அடுத்த பழைய பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளிப்பதில் கட்சியினர் இரு பிரிவுகளாக மோதி கொண்டதால் பரபரப்பு நிலவியது. பழைய பல்லாவரத்தில் திருப்பெரும்பதூர் மக்களவைத் அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் பிரச்சாரத்தின் போது, அதிமுக முன்னாள் எம்எல்ஏ தன்சிங், அவரது மகன் அதிமுக பகுதி செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உடன் வந்தனர். பிரச்சாரத்திற்காக அதிமுக நிர்வாகியான ராஜப்பா, பெண்களை திரட்டி அங்குள்ள கோயில் வளாகம் முன்பாக வரவேற்பு அளிக்க காத்திருந்தார். அதற்கு முன்னாள் எம்எல்ஏ தன்சிங் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினரும் மாறி மாறி திட்டிக் கொண்டனர். தன்சிங் ஒழிக என பெண்களும் ராஜப்பா ஆதரவாளர்களும் கோஷங்கள் எழுப்பினர். இரு தரப்பு மோதலில் பிரச்சார வாகனத்தின் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பக்கம் பரபரப்பும் பதற்றமுமாக மோதல் நடந்து கொண்டு இருந்த போதும், அதிமுக வேட்பாளர் தன் கட்சியினரை சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை. மாறாக காரியமே கண்ணாக அவர் பிரச்சார வாகனத்தில் இருந்தவாறே கைகூப்பி வாக்கு கேட்டுக் கொண்டு இருந்தார். இதையடுத்து போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.