டெல்லி: தேர்தல் பத்திரங்களின் எண் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மார்ச் 21ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் அளித்த பிறகு ஆணையத்திடம் சமர்ப்பித்த இந்த தகவலை உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 18ம் தேதி உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 15 அன்று உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை எஸ்.பி.ஐ. இரண்டு பகுதிகளாக வழங்க உத்தரவிட்டிருந்தது.
ஆனால், நிறுவனங்கள் நன்கொடை அளித்த விவரங்களை மட்டும் அளித்த எஸ்.பி.ஐ. முழுமையான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கவில்லை. இதனையடுத்து கடந்த 18ம் தேதி அன்று தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டு அதுகுறித்து பிரமாணப்பத்திரம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.