தஞ்சாவூர்: ‘இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அணுகினால் இரட்டை இலை சின்னம் முடங்கிவிடும் வாய்ப்பு உள்ளது’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார். தஞ்சாவூரில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் நேற்று அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு செயல்பட்டார்.
எடப்பாடி தன்னை சூப்பர் புரட்சி தலைவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி முதல்வராக இருந்த போது 5 ஆண்டுகளிலும் அவரை ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது. தங்களை எடப்பாடி சந்திக்கவே இல்லை என்று கட்சிக்காரர்கள் குற்றம் சாட்டினர். அதிமுகவை இணைப்பதற்கு எடப்பாடியை தவிர எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். வழக்கு நிலுவையில் உள்ளதால், இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அணுகினால் இரட்டை இலை சின்னம் முடங்கிவிடும் வாய்ப்பு உள்ளது.
எடப்பாடி இல்லாமல் கட்சியை இணைப்போம். அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடியா-மோடியா என்று கூறுவாரா?
வைத்திலிங்கம் கூறுகையில், ‘பாஜவுடன் கூட்டணி இல்லை என கூறும் எடப்பாடி, ‘ஜெயலலிதா இந்த லேடியா – மோடியா என்றாரே, அது போல் எடப்பாடியா – மோடியா என்று கூறுவாரா? அல்லது எடப்பாடியா – ராகுலா’ என்று எடப்பாடியால் கேட்க முடியுமா? எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட்டால் சேலத்தில் கூட டெபாசிட் பெற முடியாது’ என்று தெரிவித்து உள்ளார்.