மும்பை: தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் குறித்த விவரங்களை 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு மாநிலங்களுக்கு ஒரேநாளில் பிரசாரம் செய்ய தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்களை அரசியல் கட்சி தலைவர்கள் பயன்படுத்துகின்றனர். 18வது மக்களவை தேர்தலையொட்டி தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் தேவை 40% அதிகரித்துள்ளது. அதற்கான வாடகை கட்டணமும் உயர்ந்துள்ளது என அண்மையில் தகவல் வௌியானது.
இந்நிலையில் விமானம், ஹெலிகாப்டர் பயன்பாடு குறித்த விவரங்களை 24 மணி நேரத்துக்கு முன் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மும்பை புறநகர் மாவட்ட துணை தேர்தல் அதிகாரி தேஜாஸ் சாமெல் கடந்த 12ம் தேதி வௌியிட்ட கடிதத்தில், “விமானம், ஹெலிகாப்டர் பயன்பாடு பற்றிய தகவல்களை பிரசாரத்துக்கு செல்வதற்கு 3 நாட்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும் என்று முன்பு விதி இருந்தது. இந்த காலக்கெடு தற்போது 24 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசியல் கட்சியினர் விமானம், ஹெலிகாப்டர் பயன்பாடு, அவை புறப்படும் இடம், சேருமிடம் மற்றும் அதில் பயணிப்பவர்களின் விவரங்களை 24 மணி நேரத்துக்கு முன் தெரிவிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.