சென்னை: கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே 8 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நேற்று முன்தினம் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் பேருந்து நிறுத்தம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். உடனே, அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அந்த பையினுள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சட்டவிரோதமாக கஞ்சா மறைத்து வைத்திருந்த உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.