சிவகங்கையில் நேற்று முன்தினம் இரவு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் பேசியதாவது: அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச்செயலாளரை தொண்டர்கள் தேர்வு செய்யும் உரிமையை வழங்கியவர் எம்ஜிஆர். ஆனால் அவர் உருவாக்கிய தொண்டர்களின் இயக்கமான அதிமுகவை காலில் போட்டு மிதித்தவர் எடப்பாடி பழனிசாமி. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்தபின் நடந்த பொதுக்குழுவில், அவரே நிரந்தர பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றினோம். இதையடுத்து, கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை உருவாக்கினோம். பொதுச்செயலாளரை தொண்டர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று எம்ஜிஆர் உருவாக்கிய விதியை எடப்பாடி மீறியுள்ளார்.
பொதுக்குழு கூட்டத்தில் என் மீது தண்ணீர் பாட்டில் வீசச்செய்து, கட்சிக்கு களங்கம் உருவாக்கினார். எப்பொழுது ஜெயலலிதா இறப்பார் என எடப்பாடி காத்திருந்தார். அதன்பிறகு தனது சுயரூபத்தை காட்டியுள்ளார். அவரை முதலமைச்சராக அறிவித்த பாவத்தையும் நான்தான் செய்தேன். 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை என்னை முன்மொழியும்படி சொன்னார். அந்த பாவத்தையும் செய்தேன். ஈரோடு இடைத்தேர்தலில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதால் போட்டியில் இருந்து விலகினேன். ஆனால், இரட்டை இலை சின்னம் கிடைத்தும் எடப்பாடியால் வெற்றி பெற முடியவில்லை. இப்போது நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்களின் ஆதரவுடன் இரண்டாம் தர்மயுத்தம் தொடங்கியுள்ளோம். தேர்தல் பணிகளை முழுமையாக செய்தால், 39 தொகுதியிலும் நமது அணி நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு பேசினார்.