பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். கடந்த 2020ல் அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாடு புரட்சித் தலைவர் டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்த இடமான வேதா நிலையத்தை ஒரு நினைவு இல்லமாக மாற்றுவதற்கும், பராமரிப்பதற்கும் வகை செய்யப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த சொத்து ஜெயலலிதாவின் வாரிசுகளையே சேரும் என்று உத்தரவிட்டு வேதா நிலையத்தின் சாவியை அவரின் சட்ட பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி வேதா நிலையத்தின் சாவி ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் செயல்படாத நிலையில் அச்சட்டம் காலாவதியாகிவிட்டது. எனவே, இந்த சட்டத்தை நீக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று பேரவையில் நிறைவேற்றப்படவுள்ளது.