அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேட்டில் நேற்று அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது, ‘‘அதிமுகவுக்கு துரோகம் செய்து விட்டு கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபடும் துரோகிகளோடு கூட்டணி வைத்துள்ளவர்களுக்கு அதிமுகவில் நுழைய வாய்ப்பு இல்லை. அதிமுக தற்போது எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை எடப்பாடி பழனிசாமி இயக்குகிறார். ஓபிஎஸ், டிடிவி.தினகரன் உள்ளிட்ட சிலர், இந்த எடப்பாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள். இனிமேல் அதிமுக என்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை. இடம் தரவும் மாட்டார்கள்’’ என்றார்.