Thursday, May 16, 2024
Home » எடப்பாடி சொந்த ஊரில் அதிமுகவில் கோஷ்டி பூசல்: மாவட்ட செயலாளருக்கு எதிராக பரபரப்பு ஆடியோ

எடப்பாடி சொந்த ஊரில் அதிமுகவில் கோஷ்டி பூசல்: மாவட்ட செயலாளருக்கு எதிராக பரபரப்பு ஆடியோ

by Karthik Yash

சேலம்: சேலம் அதிமுக மாவட்ட செயலாளருக்கு எதிரான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. சேலம் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவனும், சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலமும் இருக்கின்றனர். இந்தநிலையில் கோஷ்டி மோதல் காரணமாக இளங்கோவனிடம் இருந்து 7 பஞ்சாயத்தை பிரித்து மாநகர் மாவட்டத்திற்குள் சேர்க்கப்பட்டது. அதன் ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஏ.வி.ராஜூ. தற்போது இவர் மாநகர் மாவட்ட செயலாளர் கட்டுபாட்டின் கீழ் வந்துவிட்டார்.

இந்நிலையில், ஏ.வி.ராஜூ பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், மாநகர் மாவட்ட செயலாளரை அவதூறாக பேசும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது. மேலும், ‘‘தன்மானத்தை இழந்து அவனிடம் முட்டிபோடும் கேவலமான ஆள் நான் கிடையாது. இரண்டு எலக்‌ஷனுக்கும் அவனுக்கு வேலை பார்த்துள்ளேன். இளங்கோவனிடம் சொல்லிவிட்டு கட்சியில் இருந்து வெளியே வந்துவிடுவது தான் நல்லது’’ என்பதோடு அந்த ஆடியோ முடிகிறது. எதிர்பகுதியில் பேசுபவர் ஒரு பெண் எனவும் தெரியவந்துள்ளது. 2 மாவட்ட செயலாளர்கள் இடையே இருக்கும் மோதலை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆடியோ இருப்பதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி ஏவி ராஜூவிடம் கேட்டபோது, ‘அந்த ஆடியோ எனக்கும் வந்தது. யாரோ நன்றாக எடிட் செய்து அவதூறாக வெளியிட்டுள்ளனர். அது என் குரல் அல்ல. நான் கெட்ட வார்த்தை பேசுவதே இல்லை. அதுவும் பெண் ஒருவரிடம் பேசுவது என்பது பொய்யான தகவல். மாவட்ட செயலாளர் இளங்கோவனிடமும் வெங்கடாஜலத்திடமும் நேற்று கூட பேசினேன். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஒற்றுமையாக உள்ளோம். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டேன்’ என்றார். இந்தஆடியோ அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

3 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi