சென்னை : கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் நெடுஞ்செழியன் போட்டியிட உள்ளார். அதிமுக தற்போது 2 அணிகளாக உடைந்தாலும், எடப்பாடி பழனிசாமி அணியிடம்தான் தற்போது அதிமுக உள்ளது. பெரும்பாலான நிர்வாகிகளும் அவரிடம்தான் உள்ளனர். இந்த நிலையில் பாஜவை எதிர்த்து கர்நாடகா தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதன் மூலம் அங்கு பாஜ கூட்டணி உடைந்துள்ளது. கர்நாடகா மாநிலம் புலிகேசி (தனி) தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கர்நாடகா மாநிலம் அதிமுக எடப்பாடி அணியின் அவைத்தலைவராக உள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் தரப்பும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 10-05-2023 அன்று நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக 159 – புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் கர்நாடக மாநில மாணவர் அணிச் செயலாளரான திரு. M. நெடுஞ்செழியன் அவர்கள் நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். புலிகேசி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முரளியை எதிர்த்து பழனிசாமி தரப்பு வேட்பாளரை நிறுத்தியுள்ள நிலையில் பன்னீர் அணியும் வேட்பாளரை நிறுத்தியது.