சிதம்பரம்: அதிமுக ஆட்சிக்காலத்தை இருண்ட ஆட்சி என்று கூறுபவர்களிடம் 3 ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிடுவதாக அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டுள்ளார். சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். சிதம்பரம் புறவழி சாலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் பங்கேற்ற அவர் 30 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருந்ததால் தான் இன்றைக்கு தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருப்பதாக கூறினார்.
தான் முதலமைச்சராக பதவி வகித்த 3 ஆண்டுகளில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் செயப்படுத்தப்பட்ட பட்டியலை அவர் வெளியிட்டார். பாஜக கூட்டணியிலிருந்து விலகி விட்டதாகவும் தமிழ்நாட்டை பாதிக்கும் எந்த திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்தாலும் அதை கண்டிப்பாக எதிர்ப்போம் என்றும் கூறினார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் காட்டுமன்னார் கோயிலில் எல்.இளையபெருமாளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.