டெல்லி : 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 330 இடங்களில் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் முதன்முறையாக 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தமிழ்நாட்டில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக சார்பில் முன்னாள் எம்பி ஏ.கே. மூர்த்தி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி, ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,”மோடி அரசு அமைந்த பிறகு இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பேதம் இல்லை. ஒருமித்த கருத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் செயல்படுகின்றன.லக அளவில் இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோதும், இந்தியாவில் பாதிப்பை குறைக்கும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக ஆட்சியில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அதிமுக தனது கொள்கையில் இருந்து எப்போதும் விலகாது.சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தேர்தலுக்காக கூட்டணி வைக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் நிலையான கொள்கைகள் உள்ளன.தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியாகவும், பிரதான எதிர்கட்சியாகவும் அதிமுக உள்ளது.இனறைய இளைஞர்களின் தேவைகளை அறிந்து செயல்பட கூடிய அரசாக பாஜக உள்ளது. பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அடிமையாக உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை,’என்றார்.