நாக்பூர்: ஒன்றிய அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது சிபிஐ, ஈடி, ஐடி அமைப்புகள் ஏன் விசாரணை நடத்தவில்லை? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நாக்பூரில் 2014,2019ஐ தொடர்ந்து இப்போதும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி போட்டியிடுகிறார்.
அவர் தலைமையிலான ஒன்றிய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பாரத்மாலா பரியோஜனா திட்டம், துவாரகா விரைவு சாலை திட்டம் உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களில் பல கோடி ஊழல் நடந்ததாக ஒன்றிய தணிக்கை அதிகாரி (சிஏஜி) தனது அறிக்கையில் குற்றம்சாட்டி உள்ளார். பாஜ அரசின் இந்த ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை, புலனாய்வு அமைப்பு, வருமான வரித்துறை விசாரணை நடத்தாதது ஏன்? பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதல் இன்றி ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்களை வௌியிட்டுள்ளது.
ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நெடுஞ்சாலை ஆணையம் பெருமளவில் கடன்களை வாங்கி உள்ளது, ஆனால் அதன் கட்டுமான செலவுகள் இரட்டிப்பாகி உள்ளன. அமலாக்கத்துறை, புலனாய்வு அமைப்பு, வருமான வரித்துறைகள் இப்போது எங்கே போய் விட்டன. இந்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை அறிக்கை வௌியிட்டார்களா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.