ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கிறது. அமலாக்கத்துறை 7 முறை சம்மன் அனுப்பியும் ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 20-ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. ஜன.20-ல் ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என சோரன் கடிதம் எழுதியிருந்தார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடந்து வரும் நிலையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டின் முன்பும் ஏராளமான போலீசார், துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.