புதுடெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் சமீபத்தில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோல பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் கைது செய்து அக்கட்சிகளை பிரசாரம் செய்ய விடாமல் ஒன்றிய பாஜ அரசு முடக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை சமமாக நடத்துவது மற்றும் அவர்களின் பிரச்சார உரிமையைப் பாதுகாப்பதில் ஆணையம் அசைக்க முடியாத உறுதியுடன் இருக்கிறது. ஆனாலும், சட்டப்பூர்வ நீதித்துறை நடவடிக்கையை மீறக்கூடிய எந்த செயலையும் செய்வது சரியாக இருக்காது’ என கூறி உள்ளது.