ஈக்வடார்: ஈக்வடார் நாட்டில் டிவி சேனல் ஆபீசில் முகமூடி கும்பல் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டியதால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பசிபிக் கடல் தீவு நாடான ஈக்வடார் நாட்டின் குவாயாகில் செயல்பட்டு வரும் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் ஆயுதம் ஏந்திய முகமூடி கும்பல் ஒன்று புகுந்தது. அந்த நிறுவனத்தின் உள்ள பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் நேரடி ஒளிபரப்பு நடந்து கொண்டிருந்தது. தொலைகாட்சி நிறுவனத்திற்குள் புகுந்த கும்பல், துப்பாக்கி முனையில் பணியாளர்களை மிரட்டியது. அவர்களில் சிலர் அந்த கும்பலிடம் மோத முயன்ற போது, அவர்களை அந்த கும்பல் தாக்கியது. சிலரை கீழே தள்ளிவிட்டு இழுத்து சென்றனர். இதனால் பணியாளர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவியது.
இதற்கிடையே அங்குள்ள பணியாளர் ஒருவர் போலீசுக்கு தனது செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பினார். அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிரடிப்படை போலீசார், ஒட்டுமொத்த தொலைக்காட்சி நிறுவனத்தையும் சுற்றிவளைத்தனர். தொடர்ந்து அதிரடி நடவடிக்கையின் மூலம் ஆயுதம் ஏந்திய கும்பலை சேர்ந்த அனைவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். ெதாலைகாட்சி நிறுவனத்தில் பணியாற்றிய அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையின் ஜெனரல் கமாண்டர் சீசர் ஜபாடா கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட 13 பேரிடம் இருந்து நான்கு துப்பாக்கிகள், இரண்டு கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் குயாகுவிலில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து கும்பல் தலைவன் அடோல்போ ஃபிட்டோ மசியாஸ் என்பவன் தப்பினான்.
அவனுடன் மேலும் பலர் தப்பினர். அதையடுத்து சிறையில் இருந்து தப்பிய கும்பல்தான் இந்த தாக்குதல் முயற்சியை செய்திருக்க வாய்ப்புள்ளது. குவாயாகில் நகரில் அமைந்துள்ள மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்தில் ஆயுதம் ஏந்திய கும்பல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கும் தேடுதல் வேட்டை தொடர்கிறது’ என்றார். இதற்கிடையே ஈக்வடார் நாட்டில் அடுத்த 60 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டதாக அதிபர் டேனியல் நோபோவா அறிவித்தார். மேலும், ஆயுதம் தாங்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.