வேலூர்: பாமக சார்பில் சமூகநீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் வேலூர் மாநகராட்சி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் கட்சி தலைவர் அன்புமணி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 2.3 கோடி குடும்பங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்று அறிந்து கொள்ள நாங்கள் இந்த கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகிறோம். இங்கு பல சாதிகள், மதங்கள் கொண்ட குடும்பங்கள் உள்ளது. இவர்களின் நிலை, பொருளாதார நிலை குறித்து தெரியவந்தால் தான் அதற்கு ஏற்ப வியூகம் அமைத்து அவர்களுக்கு திட்டம் தீட்டப்பட்டு இடஒதுக்கீடு, சலுகை போன்றவை வழங்க முடியும். இதை செய்தால் தான் தமிழகம் முன்னேறும். இந்தியாவில் சாதி அடிப்படையில் தான் இடஒதுக்கீடு முறை உள்ளது. அதனால் தான் இந்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரசை ராமதாஸ் பலமுறை வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை பின்னர் தான் அறிவிப்போம். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை. அது அரசியல் அல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவருக்குமான ஒதுக்கீடு உயரும்’ என்றார்.